அ.தி.மு.க.வை பாரதிய ஜனதா பகடைகாயாக பயன்படுத்துகிறது: முத்தரசன்

258 0

தமிழ்நாட்டில் காலூன்ற அ.தி.மு.க.வை பாரதிய ஜனதா பகடைகாயாக பயன்படுத்துகிறது என இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கடலூர் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வில் உள்கட்சி பிரச்சனை இருக்கிறது. உள்கட்சி பிரச்சனை உருவாகுவதற்கோ, உருவாக்கி செயல்படுத்துவதிலோ பாரதிய ஜனதாவின் பங்கு இருக்கிறது. கட்சி 2 ஆக பிரிவது, மீண்டும் இணைவது அனைத்திலும் பாரதிய ஜனதா தலையீடு உள்ளது.

பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் காலூன்ற அ.தி.மு.க.வை எப்படி பகடைகாயாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறது என்பது வெளிப்படையான உண்மை.

கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் பற்றி உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும்.

ஜெயலலிதாவின் சொத்துகளை அரசுடைமை ஆக்க வேண்டும் அல்லது அவரது சொத்துகளுக்கு யாராவது உரிமை கொண்டாடினால், அது பற்றி உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது கண்டனத்துக்குரியது.

தமிழக அரசு தனது நிலையை மாற்றிக்கொண்டு நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாமல் வறட்சியில் இருந்து முற்றிலுமாக தமிழகத்தை மீட்பதற்கு, மத்திய அரசிடம் உரிய நிதியை கோரி, விவசாயிகளை காப்பற்றுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளின் பிரச்சனையை மத்திய, மாநில அரசுகள் தீர்க்காவிட்டால் மீண்டும் அனைத்துக்கட்சிகளும் ஒன்று கூடி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.விவசாயிகளின் பிரச்சனை தொடர்பாக அனைத்துக்கட்சி சார்பில் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த போராட்டத்தால் கூட்டணி ஏற்படுமா? என்று கேட்கப்படுகிறது. கூட்டணிக்கான அவசியம் தற்போது ஏற்படவில்லை.இவ்வாறு முத்தரசன் கூறினார்.