எமது நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினரை சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றில் நிறுத்த ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினரின் மேதினக்கூட்டம் நேற்று கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“எமது இராணுவத்தினரை சர்வதேச யுத்த குற்ற நீதிமன்றில் நிறுத்தும் விதமாகவே இந்த அரசாங்கம் செயற்படுகிறது.
அதற்கு நாம் எப்போதும் இடமளிக்க முடியாது. எனது காலத்தில் இராணுவம் பயங்கரவாதத்தை இல்லாது செய்து சமாதானத்தை ஏற்படுத்தியது.
எனினும் இன்று இராணுவத்தினரை மக்களின் கோரிக்கைகளை வைத்து முடக்கப் பார்க்கின்றனர்.
முடியுமானால் காலி முகத்திடலை மக்களை கொண்டு நிரப்பி மே தின கூட்டத்தை நடத்துமாறு இந்த அரசாங்கம் எனக்கு சவால் விடுத்தது.
நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். இன்று அந்த சவாலில் வெற்றியைக் காண்பித்துள்ளேன். இப்போது நான் இந்த அரசாங்கத்துக்கு ஒரு சவாலை விடுக்கின்றேன்.
முடியுமானால் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள்” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.