தம்புள்ளையில் கோர விபத்து! நபரொருவர் பலி

229 0

தம்புள்ளை – வேவல பிரதான பாதையில் நிகவட்டவக பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் சம்பவ இடத்திலலேயே உடல் சிதறி பலியானார்.

உந்துருளி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்த விபத்தில் உந்துருளியை செலுத்திய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எனினும் விபத்தின் பின்னர் காவற்துறை பரிசோதனைக்காக சிதறிய உடல் துணிவொன்றால் மூடப்பட்டிருந்த நிலையில், அதனை அகற்றி சிலர்  காணொளி மற்றும் படங்களை எடுக்க முற்பட்ட போது முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் தம்புள்ளை வேவல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான நபரொருவர் என தெரியவந்துள்ளது.

மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி தம்புள்ளை திசையில் இருந்து வேவல திசை நோக்கிச் சென்றுள்ளது.

இந்நிலையில் வேவல பிரதேசத்தில் இருந்து தம்புள்ளை திசை நோக்கி உந்துருளி  பயணித்துள்ள நிலையில், குறுகிய வளைவொன்றில் இரண்டும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தம்புள்ளை காவற்துறை இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.