முஸ்லிம் மாணவிகள் பர்தாவைக் கழற்ற வேண்டிய கட்டாயம் இனி இல்லை -அகிலவிராஜ்

267 0

முஸ்லிம் மாணவிகள் பர்தாவைக் கழற்ற வேண்டிய கட்டாயம் இனி இல்லை என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரிய வசம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் (தேசியப்பாடசாலை) யின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வியியல் மற்றும் வர்த்தகக் கண்காட்சி நிகழ்வுளின் ஆரம்ப விழா சனிக்கிழமை பகல் இடம்பெற்றது.

அந்நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர், கடந்த காலங்களில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்களுக்கிருந்த பல்வேறு அசௌகரியங்களை நாம் மாற்றியமைத்திருக்கின்றோம்.

முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாச்சாரப்படி பர்தா அணியலாம்.

அவற்றைக் கழற்றி வீசிவிட்டு பாடசாலைகளுக்கு வரவேண்டிய எந்த நிர்ப்பந்தமும் இல்லை.

எல்லா சமூகத்தாரும் தமக்கே உரித்தான பாரம்பரிய கலாசார விழுமிய பண்பாட்டு சிறப்பம்சங்களை பேணிப் பாதுகாத்து அதன்படி இந்த நாட்டில் வாழ்வதற்கு எல்லா உரிமைகளும் உள்ளன.

கடந்த கால அரசாங்கத்தில் இருந்ததைப் போலல்லாது வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு என்று பிரித்துப் பார்க்காது பொதுவான கல்விக் கொள்கையை வகுத்து நாம் இன ஐக்கியத்தின்பால் செயற்பட்டு வருகின்றோம்.

இலங்கையின் கல்வியமைச்சிலே முதற் தடவையாக இன நல்லிணக்க சௌஜன்யப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய இனக்குரோத பாகுபாடுகளை இல்லாமற் செய்வதற்காக விஷே‪ட சுற்றுநிருபங்களை நாங்கள் தயாரித்து அவற்றைக் கடைப்பிடித்தொழுகுமாறு நாம் கண்டிப்பான உத்தரவையும் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கியிருக்கின்றோம்.

நல்லாட்சியின் தலைவரான ஜனாதிபதி, பிரதம மந்திரி ஆகியோரின் பூரண ஆதரவு எமக்கிருப்பதால் இந்த விடயம் சாத்தியமாகியுள்ளது.

கல்வியில் பெருந்தொகை செலவு செய்து கிழக்கு மாகாண கல்வித் தரத்தை உயர்த்தவுள்ளோம்.

கல்வி முன்னேற்றத்தினூடாகத்தான் இந்த நாட்டில் ஒரு புதிய வழியைத் திறக்க முடியும்.

அந்த வகையில் அதிபர்கள் 3901 அதிபர்களையும், கல்வி நிருவாக சேவையிலே 852 அதிகாரிகளை நியமிக்க முடிந்தது.

மேலும், ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்கும் வளதாரிகளாக 1190 உள்வாங்கப்படவுள்ளார்கள்.

எதிர்வரும் சமீப காலத்திற்குள் மாகாணப் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கணக்கிட்டு 20 ஆயிரம் ஆசிரியர்கள் உள்வாங்கப்படவுள்ளார்கள்.

சகல ஆசிரியர்களுக்கும் அவர்களது ஆளுமையையை வளர்த்துக் கொள்ளத் தேவையான பயிற்சிகளை வழங்கி வருகின்றோம்.

இந்த நாடு ஏனைய உலக நாடுகளுடன் கல்வியில் போட்டி போட்டு முன்னேறுவதற்கான சகல திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளன.

பிரதான பாடசாலைகளுக்கு 50 கணனிகளை வழங்கும் உத்தேசம் உள்ளது.

அருகிலுள்ள சிறந்த பாடசாலை திட்டத்திலே 78 பாடசாலைகளுக்கு போதுமான சிறந்த பௌதீக வளங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

இந்த வருடத்துக்குள் 45 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் காப்புறுதி செயற்திட்டத்தை வழங்கவுள்ளோம்.

இதற்கான கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.