வைத்தியரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கத்தியை காண்பித்து அச்சுறுத்தி பணம், நகை கொள்ளை ; இருவர் கைது

7 0

தலங்கமை பிரதேசத்தில் உள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, வைத்தியரிடம் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்தி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கமை பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவரே இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் கடந்த 19 ஆம் திகதி தலங்கமை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 45 வயதுடையவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் தங்க நகைகளின் மொத்த பெறுமதி 7 இலட்சம் ரூபா ஆகும்.

இந்த கொள்ளை சம்பவம் வைத்தியரின் வீட்டிற்கு அருகில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்று (21) கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.