கடலில் தேங்கும் கழிவுகளால் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக புகார்

13 0

 மாமல்லபுரம் முதல் கடலூர் சின்னக்குப்பம் வரையிலான கடலில் கழிவுகள் தேங்கியுள்ளதால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் கால்வாய்களில் நீர்வரத்து ஏற்பட்டது.

குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில், முட்டுக்காடு பகுதியில் முகத்துவாரம் பெரிய அளவில் வெட்டப்பட்டது. இதனால் கழிவுகளுடன் கூடிய மழைநீர், கடலில் கலந்தது. செடி, கொடிகள் என பலவும்கடலில் கலந்ததால், கடற்கரையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு கடலின் உள்ளே பாசிகள் மற்றும் செடி,கொடிகள் தேங்கியுள்ளன.

மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், கடலூர் சின்னக்குப்பத்தில் கடலில் கழிவுகள் தேங்கியுள்ளதால், மீனவர்கள் மீன்பிடி வலைகளை கடலில் வீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வலைகளை வீசினாலும் அவை கழிவுகளில் சிக்கி, மீன்பிடி வலைகள் சேதமடைவதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள் ளனர்.சதுரங்கப்பட்டினம் பகுதியில் கடலில் தேங்கியுள்ள கழிவுகள்.