கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு வெளிநாட்டவர்கள் நாடு கடத்தல்

14 0

கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகளிடம் இலங்கைக்கு வந்ததன் நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்த தவறிய சந்தேகத்திற்கிடமான இரண்டு வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நேற்று (19) இரவு 09.35 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-403 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது இலங்கைக்கு வந்ததன் நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்த தவறியமையினால் 36 வயது மற்றும் 37 வயதுடைய இருவரும் நேற்று (19) இரவு அவர்கள் வந்த அதே விமானத்தில் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான இந்த இரு வெளிநாட்டவர்கள் சீனர்கள் எனவும், அவர்களின் சீனக்கடவுச்சீட்டுகளில் சீனாவில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர் பிறந்த இடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவர்களிடமிருந்து கம்போடிய மற்றும் துருக்கி கடவுச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சீன அரசின் சட்டத்தின்படி, அந்நாட்டு குடிமக்கள் இரட்டைக் குடியுரிமை வைத்திருக்க முடியாது, அவர்கள் வேறு நாட்டின் குடியுரிமை பெற்றால், சீன அரசின் குடியுரிமை இரத்து செய்யப்படும்.

சீன பிரஜைகள் தற்போது இலங்கையிலும், வெளிநாடுகளிலும் பாரிய கணினி குற்றங்கள் மற்றும் பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர்கள் இருவரையும் நாடு கடத்துவதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.