தமிழ்த் தேசியம் மட்டும் ஈழத் தமிழர்களுக்கான அடையாளம் – சிறீதரன்

22 0

ஈழத் தமிழர்களை அரசியல் வெறுமை சூழ்ந்த காலத்தில் இனத்துக்கே அடையாளம் தந்த ‘தமிழ்த் தேசியத்தை’ கொள்கையாக வரித்து நாம் ஆரம்பித்த அரசியல் பயணத்தை அதே தளத்தில் நின்று பிறழாத பிரதிநிதிகளாக இதுவரை காலமும் முன்னெடுத்திருக்கிறோம் என நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகர வட்டார சமூக மட்ட அமைப்புகளின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை (19) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியம் மட்டும் ஈழத் தமிழர்களுக்கான அடையாளம். அத்தகைய அடையாளத்தை நிரந்தரமாக பேணும் வகையிலான அரசியல் செல்நெறிகளின் மூலம் இனத்தின் இறைமையை மீட்கும் என் அரசியல் பணியும் பயணமும் தொடரும்.

எங்கள் அடையாளங்களை இழக்கத் துணியும் எந்த மாற்றங்களுக்கும் எமது இளைய தலைமுறையினர் உட்பட்டுவிடக்கூடாது என்றார்.

சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்ததுடன், கிளிநொச்சி மாவட்டத்தின் தமிழ்த் தேசியப் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையில் தமது ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.