சுயேட்சை குழுக்கள் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளன – கருணாகரம்

19 0

சுயேட்சை குழுக்கள் இம்முறை  பல ஆயிரக்கணக்கான நிதிகளை செலவிட்டு தமிழர்களின் வாக்குகளை பிரித்து மாற்றினத்தவருக்கு ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற காரணத்தினால் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளன என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துளார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (20) மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷின் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழர்களின் ஒற்றுமை நிலைத்திருக்க சங்கு முழங்கட்டும் எனும் தலைப்பின் கீழ் தமிழ் தேசியத்தின் சின்னமாக சங்கு சின்னத்தில் இடம்பெறுகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுன்ற வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு இங்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலானது வட கிழக்குக்கு ஒரு முக்கியமான தேர்தலாக காணப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்திலே பல சுயேட்சை குழுக்கள் இம்முறை களமிறங்கப்பட்டுள்ளன. அவர்கள் பல ஆயிரக்கணக்கான நிதியை செலவிட்டு அரசியல் செய்கின்றனர். இது யாருக்காக? இதில் பல சுயேட்சை குழுக்கள் தமிழர்களின் வாக்குகளை பிரித்து மாற்றினத்தவருக்கு ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற காரணத்தினால் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் ஒரு தேசியக் கட்சியில் முதன் முறையாக ஒரு சிங்கள இனத்தவர் இம்முறை பாராளுமன்றத் தேர்தலிலே களமிறக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னணிகளை நோக்கும்போது சுயேட்சைகள் தாங்கள் வாக்கெடுக்காவிட்டாலும் பரவாயில்லை தமிழினத்துக்கு துரோகம் இழைப்பதற்காகவே அவர்கள் இம்முறை போட்டியிடுகின்றார்கள்.

மாவட்டத்திலுள்ள மக்கள் எமது கட்சிக்கு பூரண ஆதரவினை தந்து இம்முறை தேர்தலில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.