சங்கு சின்னம் எனக்கு எழுதித் தரப்பட்ட சின்னமல்ல – அரியநேத்திரன்

13 0

சங்கு சின்னம் என்பது எனக்கு எழுதித் தரப்பட்ட சின்னமல்ல. அது ஒரு சுயேட்சியின் சின்னமாகும். இலங்கை அரசியல் யாப்பில் தேர்தல் சட்டத்தின்படி, சுயேட்சை குழுவில் யாரும் போட்டியிடலாம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட்டவருமான பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஞானமுத்து சிறிநேசனுக்காக மட்டக்களப்பு மாவட்டம் பாட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி நகர்ப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (20) தேர்தல் பரப்புகளை மேற்கொண்டிருந்தனர். இதில் அரியநேத்திரனும் கலந்துகொண்டார்.

பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமல்ல, வட கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மக்களுக்கு நாம் தெரிவித்துக்கொள்வது யாதெனில், இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு வீடு சின்னத்துக்கு நிச்சயமாக வாக்களிக்க வேண்டும்.

மட்டக்களப்பை பொறுத்தவரையில் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எமது கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினரான ஞானமுத்து சிறிநேசன் அவர்களுக்காக நாம் பிரசாரப் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். அவருக்காக வீடு சின்னத்துக்கும் ஆறாம் இலக்கத்துக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டும். அதேவேளை ஏனைய இரு வேட்பாளர்களுக்கும் மக்கள் வாக்களிக்கலாம்.

ஒரு சிரேஷ்ட உறுப்பினர் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுகின்றபோது அபிவிருத்திகள் மாத்திரமின்றி தமிழ் தேசிய அரசியலை மேற்கொண்டு செல்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என்கின்ற காரணத்தினால் நாம் அவருக்காக பரப்புரை செய்து வருகின்றோம்.

ஒரு கல்விமானாகவும், இலங்கை தமிழ் கட்சியிலே மூத்த உறுப்பினராகவும், கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்து அவர் செயற்பட்டு வருகிறார்.

சங்கு சின்னம் என்பது எனக்கு எழுதித் தரப்பட்ட சின்னமல்ல. அது ஒரு சுயேட்சியின் சின்னமாகும். இலங்கை அரசியல் யாப்பில் தேர்தல் சட்டத்தின்படி, சுயேட்சை குழுவில் யாரும் போட்டியிடலாம். அதில் நூற்றுக்கு மேற்பட்ட சின்னங்கள் வெளியிடுவார்கள். அதில் வருகின்ற ஒரு சின்னத்தை குறிப்பிட்ட குழுவுக்கு வழங்குவார்கள். இது வழக்கம்.

அந்த அடிப்படையில் நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது நான் விரும்பிய சங்கு சின்னத்தை பெற்றுக்கொண்டேன். அப்போது முப்பது நாட்களுக்கு மாத்திரம்தான் சங்கு சின்னத்தை நான் பாவிப்பதற்கு தேர்தல் ஆணையம் எனக்கு அனுமதி வழங்கியிருந்தது. அந்த சின்னத்தை பயன்படுத்தி பரிபூரணமாக தமிழ் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் 83 சிவில் அமைப்புகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து என்னை களமிறக்கியதனால் நான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன்.

நான் அந்த ஏழு கட்சிகளிலோ, 83 சிவில் அமைப்புகளிலோ அங்கத்துவம் வகிக்கவில்லை. நான் இலங்கை தமிழரசு கட்சியின் ஆயுட்கால உறுப்பினர். இன்றும் இலங்கை தமிழரசு  கட்சியிலேதான் இருந்துகொண்டிருக்கிறேன். எனவே சங்கு சின்னத்தை ஜனாதிபதித் தேர்தலுக்காக பாவித்தது உண்மை.

பின்னர் அந்த சின்னத்தை யார் எடுக்கிறார்கள், எவ்வாறு எடுப்பது என்பது தொடர்பில் தேர்தல் சட்டதிட்டங்கள் உள்ளன. சுயேட்சைக் குழுவாக யார் தேர்தல்களில் போட்டியிட்டாலும் அல்லது அரசியல் கட்சிகள் போட்டியிட்டாலும் சின்னங்களை கோருவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.

ஒரு கட்சி கோருமாக இருந்தால் அவர்களுக்கு அவர்கள் கேட்கின்ற சின்னத்தை வழங்குவார்கள். இரண்டுக்கும் மேற்பட்ட கட்சிகள் ஒரு சின்னத்தை கோருவார்களாக இருந்தால் திருவுளச்சீட்டு மூலம் அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கும்.

ஆகவே, சங்கு சின்னத்தை இப்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கின்ற அமைப்பு பெற்றுள்ளது. அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றார்.