வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற கொலை ; என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடியவாறு கருத்து தெரிவித்தவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

17 0

எனது வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற கொலை தொடர்பில் அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களில் கருத்து தெரிவித்தவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு வருகைதந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அங்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான மற்றும் முற்றுமுழுதான பொய்யான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

எனது வீட்டுக்கு முன்பாக நடைபெற்ற கொலை தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடைபெற்றுள்ளன. எனது அனைத்து தகவலும் பெறப்பட்டன. எனது கையடக்க தொலைபேசி மற்றும் மெய்க்காவலர் என அனைத்து தரப்பினரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

இச்சம்பவம் நடைபெற்றபோது நான் இருந்த இடம் தொடர்பிலான அனைத்து தகவல்களும் பொலிஸாரிடம் வழங்கப்பட்டன. ஆனால், இவையெல்லாம் வழங்கப்பட்டுள்ள நிலையில் எனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் முன்வைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளேன்.

அதேபோன்று கிருஸ்ணபிள்ளை லிங்கேஸ்வரன் என்பவர் முகப்புத்தகம் ஊடாக நேரலை செய்து எனது பெயருக்கும் எனது முற்போக்கு கழகத்துக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை முன்வைத்து வருகின்றார். முன்பு ஒரு தடவை அவருக்கு எதிராக இவ்வாறு கருத்துகளை தெரிவித்து அவருக்கு எதிராக வழக்கொன்றை தாக்கல் செய்தபோது, தான் இனி அவ்வாறு செயற்படமாட்டேன் என எங்களிடம் வந்து தெரிவித்ததையடுத்து அந்த வழக்கினை வாபஸ் செய்தேன்.

ஆனால், அவர் மீண்டும் எனது பெயருக்கும் முற்போக்கு தமிழர் கழகத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் தகாத வார்த்தைகள் மூலமாகவும் முகப்புத்தகத்தில் நேரலை செய்துள்ளார். அவருக்கு எதிராகவும் முறைப்பாட்டினை இன்று பொலிஸ் தலைமையகத்தில் செய்துள்ளேன் என்றார்.