வட மாகாண கல்வித் திணைக்களத்தின் முறையற்ற நடவடிக்கை

22 0

வட மாகாண மட்ட  சிங்கள தின போட்டி நிகழ்வுகள் நேற்றைய தினம் (18) யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கோட்டக்கல்வி அலுவலக கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

எந்த விதமான அடிப்படை ஏற்பாடுகளும் இல்லாத நிலையில் வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் இந்த போட்டி நிகழ்வுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக நடுவர் குழு உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் பல்வேறு பாடசாலைகளில் இருந்து மாணவர்களை அழைத்து வந்த பொறுப்பாசிரியர்களை நடுவர்களாக நியமித்தமை தொடர்பில் பல்வேறுபட்ட ஆட்சேபனைகளை வெளியிட்ட பெண் ஆசிரியை ஒருவரை கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இவ்வாறான பல சர்ச்சைகள், குழப்பங்களுக்கு மத்தியில் நேற்றைய தினம் இந்தப் போட்டி நிகழ்வுகள் நிறைவு பெற்றிருந்தன.

ஒரு மாகாண மட்ட போட்டி நிகழ்த்தப்படுவதாயின், ஏற்கனவே உரிய முறையில் அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டு திட்டமிட்டிருத்தல் வேண்டும். ஆனால், எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாமல் இந்த போட்டி நிகழ்வுகள் நடைபெற்றதை அறியமுடிகிறது.

குறிப்பாக, காலை 8.30 மணிக்கு கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்துக்கு மாணவர்களும் பொறுப்பாசிரியர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி  மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய தூரப் பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் இந்தப் போட்டி நிகழ்வுகளில் கலந்துகொள்ளவேண்டிய தேவை இருந்தபோதிலும் இலகுவில் அடையக்கூடிய ஓரிடத்தில் இந்தப் போட்டி நிகழ்வுகள் நடத்தப்படவில்லை.

ஐந்து மாவட்ட மாணவர்களும் இலகுவில் செல்லக்கூடிய ஒரு மத்திய நிலையத்தில் இந்த போட்டிகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருத்தல் வேண்டும். இவ்வாறான ஒழுங்குபடுத்தல்கள் பெரும் அசௌகரியங்களை மாணவர்களுக்கும் பொறுப்பாசிரியர்களுக்கும் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது.

இப்போட்டிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த கோட்டக் கல்வி அலுவலக வளாகமானது துப்பரவு செய்யப்படாது குப்பைகள் நிறைந்த பாதுகாப்பற்ற ஒரு பகுதியாகவே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இந்த பகுதியில் மாணவர்கள் தங்குவதற்கு எந்த விதமான இட வசதிகளும் ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்படவில்லை. அத்தோடு, அவ்விடங்களில் அமர்வதற்கு கதிரைகள் இடப்படாதிருந்ததையும் பொறுப்பாசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அங்கே காணப்பட்ட ஒரு கொட்டகை பாதுகாப்பற்ற நிலையில் கூரை பொறிந்து விழும் அபாயத்தில் இருந்ததாகவும் இந்த கூரை விழுந்தால் பல மாணவர்களுக்கு உயிராபத்து கூட ஏற்படலாம் என்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒரு வாக்களிப்பு நிலையத்தில் குளவிக்கூடு உள்ளதா, பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதா என்பதை அவதானித்து, ஆயிரக்கணக்கில் செலவு செய்து சீர்செய்யும் அதிகாரிகள், சிறுவர்களை ஓரிடத்தில் ஒன்றுகூட்டும்போது பாதுகாப்பு மற்றும் வசதிகளையும் கவனத்தில் எடுப்பதற்கு தவறுவது ஏன் என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த வளாகத்தில் குடிநீர் வசதி எதுவும் மாணவர்களுக்காக செய்து கொடுக்கப்படவில்லை. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியதாக கூறப்படும் இந்த போட்டி நிகழ்வில் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படாமல் மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த போட்டி நிகழ்வுக்காக மாணவர்களுக்கு சிற்றூண்டி, குளிர்பானங்களை வழங்குவதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும் அவை உரிய முறையில் பகிர்ந்து வழங்கப்படவில்லை.

கல்வித் திணைக்கள அதிகாரிகள் குளிர்பானம் மற்றும் சிற்றுண்டிகள் அருந்துவதை கண்ட சில மாணவர்கள் தாக மிகுதியால் அவர்களிடம் கையேந்தி நின்று, அதனை பெற்றதாகவும்  அதன் பின்னர் சில மாணவர்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியிடும் மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் குளிர்பானம் பொருட்களை பாடசாலை பொறுப்பாசிரியர்களுக்கு வழங்கி அவர்களினூடாக அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் செய்திருக்க முடியும். எனினும், அவ்வாறான நடவடிக்கை எதுவும் இங்கு எடுக்கப்படவில்லை.

இனிவரும் காலங்களிலாவது ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் இலகுவில் அடையக்கூடிய ஓர் இடத்தினை தெரிவுசெய்து, இந்த போட்டி நிகழ்வுகள் நடைபெற வேண்டும். இல்லாவிட்டால், வலய ரீதியாக சுழற்சி முறையில் இந்த போட்டிகள் நடைபெற வேண்டும்.

ஆங்கில தினம், தமிழ்மொழி தினம், சிங்கள மொழி தினம்  உள்ளிட்ட அனைத்து வகையான போட்டிகளும் அனைத்து வலயங்களிலும் சுழற்சி முறையில் வைக்கப்பட்டால் போக்குவரத்து, உணவு உட்பட பல்வேறு பிரச்சினைகள் எழுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

அவ்வாறன்றி, ஒரு சிலரின் தான்தோன்றித்தனமான முடிவுகளால் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிக்கப்படுவது கவலைக்குரிய விடயமே.

இது தொடர்பில் வட மாகாண ஆளுநர் விசாரணை நடத்தி, இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான போட்டி நிகழ்வுகள் புதிய கட்டமைப்புடனும் உரிய ஏற்பாடுகளுடனும்  மாணவர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்காத வகையிலும் அமைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் ஆசிரியர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.