3% உள் இடஒதுக்கீடு விவகாரம்: ராமதாஸிடம் நேரில் நன்றி தெரிவித்த தமிழ் அருந்ததியர் சங்கத்தினர்!

12 0

தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில் அருந்ததிய மக்களுக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும். பட்டியலினத்தவருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், இன்று திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் தமிழ் அருந்ததியர் சங்கத்தினர், அதன் மாநிலத் தலைவர் மாங்கனி முருகேசன் தலைமையில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்துப் பேசினர்.

அப்போது, தங்களுக்கு உள் இட ஒதுக்கீடு பெற்றுத் தருவதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். பாமக தொடங்குவதற்கு முன்பாகவே 1988-ம் ஆண்டில் ஈரோட்டில் வன்னியர் சங்கமும், தமிழ் அருந்ததியர் சங்கமும் இணைந்து வன்னியர் – அருந்ததியர் ஒற்றுமை மாநாட்டை நடத்தியது. அருந்ததியர் சங்க தலைவர் ராமன் தலைமையில் நடைபெற்ற அம்மாநாட்டில், மருத்துவர் ராமதாஸ் கலந்து கொண்டு, அருந்ததியருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; இல்லாவிட்டால் அந்த சமுதாயத்திற்கும் சேர்த்து வன்னியர் சங்கம் போராடும் என்று எச்சரித்தார்.

அப்போது தொடங்கி 2009-ம் ஆண்டில் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் வரை பல்வேறு போராட்டங்களை பாமக நடத்தியதை நினைவுகூர்ந்த தமிழ் அருந்ததியர் சங்க நிர்வாகிகள், தமிழ் அருந்ததியர் சங்கம் உள்ளிட்ட 13 அருந்ததியர் சங்கத்தின் நிர்வாகிகளுடன் அப்போதைய பாமக தலைவர் ஜி.கே.மணி கடந்த 27.11.2008-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து பேசியபோது தான் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது என்பதையும் நினைவுகூர்ந்தனர்.

இன்றைய சந்திப்பின் போது, அருந்ததியர்களின் உரிமைகளுக்காக பாமக எப்போதும் குரல் கொடுக்கும் என்று ராமதாஸ் உறுதியளித்தார். பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், வன்னியர் சங்கச் செயலாளர் சேலம் கார்த்தி, தமிழ் அருந்ததியர் சங்க மாநில நிர்வாகச் செயலாளர் கருவை கணேசன், மாநில துணைத் தலைவர்கள் சேலம் கோபால், சேலம் சுந்தரராசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.