ஓய்வூதியதாரர்களுக்கான மாதாந்த இடைக்கால கொடுப்பனவு இன்று முதல்

13 0

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபாவை இன்று (16) முதல் வழங்க ஓய்வூதிய திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கான உத்தேச மாதாந்த இடைக்கால கொடுப்பனவான 3,000 ரூபா வழங்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதற்கான பணத்தை திறைசேரியிலிருந்து வழங்குமாறு சமீபத்தில் பணிப்புரை விடுத்தார்.

அதற்கமைய, திறைசேரியிலிருந்து ஓய்வூதியத் திணைக்களத்திற்குத் தேவையான பணம் வழங்கப்பட்டு, ஓய்வூதியதாரர்களின் கணக்கில் இன்று முதல் வரவு வைக்க ஓய்வூதியத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3,000 ரூபா வழங்குவதற்கு 08/24/2024 திகதியிட்ட அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 02/2024 வெளியிடப்பட்ட போதிலும், அதற்கான எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.

கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் திறைசேரி நடவடிக்கை திணைக்களத்தினால் 679,960 ஓய்வூதியர்களுக்கு இம்மாதத்திற்கான 2,021 மில்லியன் ரூபாவை ஓய்வூதிய திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று அரசு மற்றும் தனியார் வங்கிகளில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதுடன், தபால் நிலையங்கள் மற்றும் கல்லூரிகளில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் இந்த உதவித்தொகையை நாளை மறுதினம் (18) முதல் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.