ஜேர்மனிக்கு வெளிநாட்டுப் பணியாளர்கள் தேவை: ஆனால்… இலங்கையர் ஒருவரின் அனுபவம்

19 0

ஜேர்மனியில் பணியாளர்களுக்கு தேவை உள்ளது, புலம்பெயர்ந்தோரும் ஜேர்மனியுடன் ஒருங்கிணைந்து வாழ முயற்சிக்கிறார்கள்.

ஆனால், அதற்கு மொழி ஒரு தடையாக உள்ளது என்கிறார் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பணியாளர் ஒருவர்!

இலங்கையர் ஒருவரின் அனுபவம்

பேருந்து இயக்க,  இலங்கையில் முறையாக பயிற்சி பெற்றவர் Dulaj Madhushan (29). ஆனால், அவரால் ஜேர்மன் தலைநகர் பெர்லினில் பேருந்து இயக்க முடியவில்லை.

ஐரோப்பிய ஒன்றிய குடிமகள் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டதைத் தொடர்ந்து, ஜேர்மனியில் 10 ஆண்டுகள்வரை வாழும் வகையில் குடியிருப்பு அனுமதி பெற்றுள்ளார் Madhushan.

ஜேர்மனிக்கு வெளிநாட்டுப் பணியாளர்கள் தேவை: ஆனால்... இலங்கையர் ஒருவரின் அனுபவம் | Germany Needs Foreign Workers

ஆனாலும், அவரால் பெர்லினில் பேருந்து ஓட்டுநராக பணிபுரியமுடியவில்லை. ஜேர்மனிக்கு வந்த முதல் சில மாதங்கள் கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கும் Madhushan,

தொழிற்பயிற்சியையும் மொழிப்பயிற்சியையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளவேண்டிய நிலை அங்கு காணப்பட்டதாக தெரிவிக்கிறார்.

விடயம் என்னவென்றால், எங்கு இந்த பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும், அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை தெரிந்துகொள்வதே பிரச்சினையாக இருந்திருக்கிறது.

அதாவது, BVG என்னும் பெர்லின் போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்று இந்த பயிற்சிகள் குறித்து விசாரித்திருக்கிறார் Madhushan. அங்கிருந்தவர்கள் நன்றாக ஆங்கிலம் பேசினாலும், அந்த விவரங்களை BVG வேலைவாய்ப்பு இணையதளத்தில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டிருக்கிறார்கள் அவர்கள்.

 

இணையதளத்தை பார்த்தால், அது முழுவதும் ஜேர்மன் மொழியில் இருந்திருக்கிறது. ஜேர்மன் மொழிதான் பிரச்சினையே என்றிருக்கும்போது, எப்படி அந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை படிப்பது?

வெறுப்படைந்த Madhushan அமேசான் பொருட்கள் பிரிக்கும் மையம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்துவிட்டார். அதற்கு மொழித்தகுதி உட்பட எந்த தகுதியும் இல்லை.

ஆக, ஜேர்மனியில் வேலை வாய்ப்புகள் உள்ளது உண்மைதான். ஆனால், திறன்மிகுப் பணிகளைச் செய்ய தகுதி உடையவர்களாக இருந்தும், மொழிப்பிரச்சினை அதற்கு தடையாக உள்ளது என்பதற்கு Madhushanஇன் அனுபவமே சான்றாக உள்ளது எனலாம்.