மிளகாய் நீரை ஊற்றி பொலிஸாரால் சித்திரவதை: வழக்கில் இருந்து வெளியேறிய சட்டமா அதிபர்

13 0

கண்டி – தெல்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரின் ஆணுறுப்பில் மிளகாய் நீரை ஊற்றிய சம்பவம் தொடர்பில், குற்றம் சுமத்தப்பட்ட பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி உள்ளிட்ட தரப்பினர் சார்பில் சட்டமா அதிபர் முன்னிலையாகமாட்டார் என உச்ச நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பிலேயே இன்று (15.10.2024) குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது மிகவும் பாரதூரமான சம்பவம் என்பதால், பிரதிவாதிகளான பொலிஸ் உத்தியோகத்தர்கள் சார்பில் முன்னிலையாகாமல் இருக்க சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன், இந்த அடிப்படை உரிமை மனுவில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள சட்டமா அதிபர் சார்பில் மாத்திரமே தாம் முன்னிலையாகியுள்ளதாக நீதிமன்றிற்கு கூறியுள்ளார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகளான யசந்த கோதாகொட மற்றும் குமுதுனி விக்ரமசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்படி ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், பொலிஸ் மா அதிபர், தெல்தெனிய தலைமையக பொலிஸ் பரிசோதகர், சட்டமா அதிபர் உள்ளிட்ட 11 பேரது பெயர்களை மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி தெல்தெனிய பொலிஸாரால் தாம் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறியுள்ள மனுதாரர், இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.