மட்டக்களப்பு வைத்தியசாலை கூட்டுறவு நலன்புரிசங்கத்தில் பெரும் நிதிமோசடி

17 0

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் கடந்த 5 வருடங்களாக இடம்பெற்றுள்ள 58 இலட்சத்து 5 ஆயிரத்து 853 ரூபா நிதி மோசடி தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட விசேட நிதி மோசடி விசாரணை பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவருவதாக  தெரிவித்தனர்.

குறித்த கூட்டுறவு சங்கத்தின் புதிய நிர்வாகம் 2024 ம் ஆண்டு பெறுப்பேற்றதையடுத்து நிதி தொடர்பாக ஆராய்ந்த போது நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டதையடுத்து அப்போது சங்கத்தின் பொருளாராக இருந்தவருக்கு எதிராக மாவட்ட விசேட நிதி மோசடி விசாரணை பிரிவு பொலிஸாருக்கு புதிய நிர்வாகம் முறைப்பாடு  செய்ததையடுத்து இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது இந்த சிக்கன நலன்புரி சங்கத்தில் வைத்தியசாலையில் கடமையாற்றும் சுமார் ஆயிரம் பேருக்கு மேலாக உறுப்பினர்களாக இருப்பதுடன் மாதாந்தம் சம்பளத்தில் ஆயிரம் ரூபாவை சந்தா பணமாக செலுத்திவருகின்றனர்.

இந்த நிலையில் வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் ஆண் பரிசாதகர் (அற்றன்டன்)  கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் பொருளாளராக பெறுப்பேற்று  2019 தொடக்கம் 2023 வரையான காலப்பகுதிவரை கடமையாற்றி வந்துள்ளதுடன் சங்க நிர்வாகத்தில் கடமையாற்ற வைத்தியசாலையை விட்டு வெளியாள் ஒரு பெண் ஒருவரை நியமித்து மாதாந்த சம்பளத்துக்கு கடமைக்கு அமர்தப்பட்டுள்ளார்.

இதன்போது பொருளாளர் சங்கத்தின் உறுப்பினர் பலரின் பெயரில் அவர்களுக்கு தெரியாமல் கடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து  கடன் பெற்று பணத்தை மோசடி செய்து வந்துள்ளார்.

இவ்வாறு பொருளாளர் அவரது உதவிக்கு நியமித்த பெண் ஆகியோர் கடந்த 5 வருடத்தில் 58 இலட்சத்து 5 ஆயிரத்து 853 ரூபா நிதி மோசடி செய்துள்ளனர் என மாவட்ட விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட பல விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோசடியில் ஈடுபட்ட சங்கத்தின் முன்னாள் பொருளாளர் மோசடி செய்த பணத்தில் 39 இலச்சம் ரூபா பணத்தை  திரும்ப ஒப்படைத்துள்ளதுடன் அவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட அங்கு கடமையாற்றிவந்த பெண் 19 இலச்சம் ரூபாவை இதுவரை ஒப்படைக்கவில்லை.

இருந்தபோதும் இந்த பாரிய நிதி மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருவதுடன் இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்து   இவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இதேவேளை வைத்தியசாலையில் இயங்கிவரும் இன்னொரு  கூட்டுறவு சங்கத்தில் கோடிக்கணக்கான பண மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் பொருளாளராக இருந்து மோசடி செய்தவர் அந்த சங்கத்தில் இருந்துள்ளதாகவும் சங்க யாப்பின்படி கடந்த யூலை மாதம் சங்க பொதுக் கூட்டம் கூட்டப்படவேண்டியது இன்னமும் கூட்டாமல் இருக்கின்றதாக சங்க உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளதை குறிப்பிடத்தக்கது.