ஓமந்தையில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது தற்காப்பு துப்பாக்கி சூடு

19 0

வவுனியா  – ஓமந்தை பகுதியில் மரக்கடத்தலில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்கள் தப்பிச் செல்ல முற்பட்ட போது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவமானது, நேற்று (13.10.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஓமந்தையில் இருந்து மறவன்குளம் நோக்கி கடத்தப்பட்ட பெறுமதியான மரக்குற்றிகளுடன் வாகனம் ஒன்று பொலிஸாரால் வழிமறிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பொலிஸாரை மோதி விட்டு மரக்குற்றிகளுடன் வாகனத்தில் உள்ளவர்கள் தப்பிச் செல்ல முற்பட்டுள்ள நிலையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, வாகனமும் அதில் இருந்த மரக்குற்றிகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் மரக்கடத்தலில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்திய பின் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பாெலிஸார் தெரிவித்துள்ளனர்.