போக்குவரத்து கழகங்களுக்கு 1,614 பேருந்துகள் கொள்முதல்: டெண்டர் கோரும் அறிவிப்பு வெளியீடு

37 0

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,614 பேருந்துகளை தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சாலை போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டஅறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. அந்த வகையில் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு ஏற்ப கேஎப்டபிள்யூ என்னும் ஜெர்மன் வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெறப்படும் நிதியுதவியில் குளிர்சாதன வசதியில்லா பிஎஸ் 6 வகையிலான 1,614 டீசல் பேருந்துகள் புதிதாக கொள்முதல் செய்யப்படவுள்ளன.

இதில், மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 245, விழுப்புரம் கோட்டத்துக்கு 347, சேலம், கும்பகோணம் கோட்டங்களுக்கு தலா 303, கோவை கோட்டத்துக்கு 115, மதுரை கோட்டத்துக்கு 251, நெல்லை கோட்டத்துக்கு 50 பேருந்துகள் வழங்கப்படவிருக்கின்றன. டெண்டரில் தேர்வாகும் நிறுவனம் பேருந்து வடிவமைப்புக்கான ஒப்புதல் பெற்ற 30 நாட்களில் பேருந்துகளை வழங்கும் பணியைத் தொடங்க வேண்டும். குறிப்பாக ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் 300 பேருந்துகள் வரை அளிக்க வேண்டும். டெண்டர் குறித்த சந்தேகங்களை அக். 29-ம் தேதிக்குள் கேட்கலாம். டெண்டர் கோருவதற்கான அவகாசம் டிச.2-ல் நிறைவடைகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.