மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம்

18 0

தமிழரசுக்கட்சியின் ஊடாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை மட்டக்களப்பு செங்கலடியில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏறாவூர்ப்பற்று கிளையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு செங்கலடி சௌபாக்கியா மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழரசுக்கட்சியின் முன்னாள் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் இரா.சாணக்கியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

இதன்போது தமிழரசுக்கட்சியின் ஊடாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம்செய்துவைக்கப்பட்டதுடன் அவர்கள் ஆதரவாளர்களினால் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில கட்சியின் உபதலைவர் பொன்.செல்வராஜா அவர்கள் மறைந்து இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு அவருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஞா.சிறிநேசன்,

தமிழரசுக்கட்சி தமிழர்களுக்கு என்ன செய்தது என்பதை அனைவரும் இலகுவாக கேட்பார்கள். ஆனால் தமிழரசுக்கட்சி ஒன்று இருப்பதன் காரணமாகத்தான் இந்த மண்ணில் தமிழர்கள் தனித்துவமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது என்பதை மறந்துவிடக்கூடாது.

புத்தளம்,நீர்கொழும்பு பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்த நிலையில் அங்கு தமிழரசுக்கட்சியின் ஆதிக்கம் குறைந்து தேசிய கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்த காரணத்தினால் அங்கு வாழ்ந்த தமிழர்கள் அரைகுறை தமிழர்களாக,தமிழை மறந்தவர்களாக மாறியிருக்கின்றார்கள்.

ஆனால் வடகிழக்கில் 1949ஆம் ஆண்டு தொடக்கம் எமது கட்சி ஆற்றிய பணிகள் காரணமாக தமிழர்கள் இன்றும் தனித்துவமாக தமது பண்பாடுகளுடன் தலைநிமர்ந்து நிற்கின்றார்கள் என்பதை மறக்ககூடாது.

தமிழரசுக்கட்சியானது உரிமையா சலுகையா எனக்கேட்கின்றபோது எங்களுக்கு உரிமைவேண்டும் என்று சொல்லுகின்ற கட்சியாகும்.