ஆட்சியமைக்கின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி செயற்படுவோம் – ஈபிடிபி

13 0

வடக்கு, கிழக்கில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) கனிசமான ஆசனங்ளை பெற்றுக்கொண்டு ஆட்சியமைக்கின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி செயற்படுவோம். எனவே, வீணைச் சின்னத்தில் போட்டியிடும் எங்களுக்கு வாக்களித்து எங்களை வெற்றிபெறச் செய்யவேண்டும் என மட்டக்களப்பு மக்களை அன்பாக கேட்டுக்கொள்கின்றோம் என ஈபிடிபி கட்சி மாவட்ட அமைப்பாளர் சிவானந்தராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு ஈபிடிபி காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்தலும் ஊடக மாநாடும் இடம்பெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) கட்சி வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மற்றும் கொழும்பு மாவட்டம் உள்ளடங்கலாக தேர்தலில் போட்டியிடுகின்றோம்.

1994ஆம் ஆண்டில் இருந்து நாங்கள் இன்று வரை சகல மாவட்டங்களில் தேர்தல் களத்தில் இருந்தோம் அந்த வகையில் இந்த முறையும் தேர்தலில் தூய உள்ளம் கொண்ட வேட்பாளர்களை தெரிவு போட்டியிடுகின்றோம். நாங்கள் வட மாகாணத்தில் கிடைத்த ஆசனத்தை வைத்துக்கொண்டு பல செயற்றிட்டங்களை செய்தோம்.

அந்த வகையில் மீனவர்களுக்கான மானியங்கள் வழங்கிருந்தோம். இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளது.

ஆனால், நாங்கள் ஆரம்பித்த வேலைத்திட்டம் இடைநடுவில் விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக எமது கட்சி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தொடங்கிய வேலையை முடிக்க வேண்டும் என தற்போதைய ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார். அது கட்டாயமாக நடைபெறும்.

இருந்தபோதும் இவ்வளவு காலமும் தமிழ் தேசியம் என பேசிக்கொண்ட அரசியல்வாதிகளால் மக்களின் அபிவிருத்திக்கான  வேலைத்திட்டம் எதுவும் நடந்ததில்லை. ஆனால், நாங்கள் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திகளை செய்து வந்திருக்கின்றோம்.

மாவட்ட மக்களுக்கு அன்பான வேண்டுகோள் ஈபிடிபி பரந்துபட்ட வேலைத்திட்டத்தை முன் உதாரணமாக கொண்டு இந்த தேர்தல் களத்தில் களமிறங்கியுள்ளோம்.

எனவே, இந்த முறை வீணை சின்னத்தில் போட்டியிடும்  எங்களுக்கு வாக்களித்து எங்களை வெற்றிபெறச் செய்வதன் மூலம் மாவட்ட அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றை  செய்யமுடியும் என்றார்.