வடக்கு ரயில்களை குறைந்த வேகத்தில் இயக்க நடவடிக்கை

12 0

மணிக்கு நூறு கிலோ மீற்றர் வேகத்தில் இயங்கும் நோக்கில் நவீனமயமாக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையின் மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான பகுதி முழுமையடையாத காரணத்தால் அந்தப் பகுதி ரயில்களின் வேகத்தை மணிக்கு 40 கிலோ மீற்றருக்கும் குறைவாக இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எஸ். முதலி மற்றும் புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள் உள்ளிட்ட ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் தலைமையில் ரயில்வே தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில் பாதையை எதிர்வரும் 22ஆம் திகதி திறக்கவும், முழுமையடையாத பழுதுகளை மீளமைக்கவும் செய்ய ஆறு மாதங்களுக்கு குறைந்தபட்ச வேகத்தில் ரயிலை இயக்கவும் பொதுமுகாமையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக 64 கிலோமீற்றர் தூரத்தை ஒரு மணிநேரத்தில் கடக்கும் முயற்சி இரண்டரை மணிநேரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

3,000 கோடி ரூபாய் செலவில் மஹவ முதல் அநுராதபுரம் வரையான பகுதியின் நிர்மாணப்பணிகள் இந்திய நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் ஏற்பட்ட தாமதம் காரணமாக அந்த நிறுவனத்திடமிருந்து ரயில் பாதையை ரயில்வே திணைக்களம் உத்தியோகபூர்வமாக கையகப்படுத்தியுள்ளது.