விசேட தேவையுடைய சிறுவர்களை சித்திரவதை செய்த விடுதி காப்பாளர் கைது

11 0

அநுராதபுரம் நகரிலுள்ள விசேட தேவையுடையோர் பாடசாலையின் விடுதியில் வசிக்கும் சிறுவர்களை சித்திரவதை செய்ததாக கூறப்படும் அவ்விடுதியின் காப்பாளர் நேற்று சனிக்கிழமை (12) கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், அநுராதபுரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்றினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விடுதியில் வசிக்கும் 10 முதல் 15 வயதுக்குட்பட்ட செவித்திறன் குறைபாடுடைய ஏழு சிறுவர்களை இந்த காப்பாளர் தடியினால் தாக்கியதாக பெற்றோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் தலைமை அலுவலக பொலிஸ் பரிசோதகர் ஜயவீர தெரிவித்தார்.

தாக்குதலுக்கு உள்ளான சிறுவர்கள் சட்ட வைத்தியரிடம்  ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.