31 அரசியல்வாதிகளில் 11 பேர் மாத்திரமே அரச வீடுகளை கையளித்துள்ளதாக தகவல்!

12 0

கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து அரச வீடுகளில் வசித்த 31 அரசியல்வாதிகளில் 11 பேர் மாத்திரமே அவற்றை மீளக் கையளித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் அமைச்சர்கள் வசிப்பதற்காக கொழும்புக்குள் வீடுகள் வழங்கப்பட்டிருந்தன. அவற்றை மீளக் கையளிக்குமாறு தற்போதைய அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் காலத்தில் அமைச்சர்களுக்கு அவ்விதமான வீடுகள் மீண்டும் வழங்கப்படுமா, அது தொடர்பில் புதிய அரசின் கொள்கை என்ன என்று உயர்மட்ட அதிகாரியொருவரை வினவியபோது, அதுகுறித்து பின்னரேயே முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது துணைகளின் அரசாங்கச் சலுகைகள் குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.