ஜனாதிபதியை சந்தித்தார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர்

12 0

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ் (Andalib Elias) இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு உயர்ஸ்தானிகர் எலியாஸ் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முஹம்மத் யூனுஸ் அவர்களின் வாழ்த்துச் செய்தியும் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது.

இங்கு ஜனாதிபதியும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரும் இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடினர்.

பங்களாதேஷின் உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் பங்களாதேஷில் இலங்கையின் முதலீடு மற்றும் அங்கு பணிபுரியும் பெருமளவான இலங்கை பணியாளர்கள் குறித்தும் விசேடமாக கலந்துரையாடினர்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தவேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் தற்போதுள்ள முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை (PTA) வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மற்றும் உயர்ஸ்தானிகர் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் உறுதியளித்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது மற்றும் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.