முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி மூன்றாவது நாளாக தொடரும் அகழ்வுப் பணி

13 0

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி மூன்றாவது நாளாக இன்று (10) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டுக் கழக மைதானத்தில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து இந்த அகழ்வுப் பணி இடம்பெற்று வருகிறது.

கொழும்பு நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்த அகழ்வுப்பணியானது கொழும்பில் இருந்து வருகைதந்த பொலிஸ் குழுவினரால் செவ்வாய்க்கிழமை (08) மாலை முன்னெடுக்கப்பட்டது.

பின்னர், நேற்றைய தினம் (9) வரை எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டு, இன்றைய தினம் காலை மீண்டும் தண்ணீர் அகற்றும் பணி இடம்பெற்று வருகிறது.

முள்ளிவாய்க்கால் கிழக்கு, மேற்கு பகுதிகளில் அண்ணளவாக 11க்கு மேற்பட்ட இடங்களில் இதுவரை அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, எதுவும் கிடைக்காமல்  இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.