பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக யாழ். இளைஞனிடம் மோசடி ; ஒருவர் கைது!

16 0

பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் 15 இலட்ச ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னை பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி முதல் கட்டமாக 15 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்ற பின்னர், வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காது தன்னை ஏமாற்றி விட்டதாக இளைஞன் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளான்.

முறைப்பட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த நபரை கடந்த ஞாயிற்றுக்கிழமை (06)  கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நேற்று  திங்கட்கிழமை (07)  நீதிமன்றில் முற்படுத்திய போது , இளைஞனிடம் பெற்றுக்கொண்ட பணத்தில் ஒரு தொகையை இன்று செவ்வாய்க்கிழமை (08) மீள கையளிப்பதாகவும் , மிகுதி பணத்தினை மிக விரைவில் மீளளிப்பதாக மன்றில் தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து அவரை பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.