ஹன்வெல்லயில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது!

14 0

கப்பம் வழங்காததன் குற்றச்சாட்டின் பேரில், ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடந்த 30 ஆம் திகதி இரவு இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

குறித்த கொலை சம்பத்துடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

 

டுபாயில் மறைந்திருக்கும் லலித் கன்னங்கர என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரே இந்தக் கொலைக்கு தலைமை தாங்கியதாகவும், அதேவேளை, கப்பம் கோரிய வர்த்தகர்கள் குழுவொன்றும் அப்பகுதியில் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்தச் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக மேல் மாகாணம் தெற்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் மேற்பார்வையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

 

ஹங்வெல்ல, நெலுவத்துடுவ பிரதேசத்தில் உள்ள வீட்டில் கடந்த 30 ஆம் திகதி இரவு 8.15 மணி அளவில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் வர்த்தகர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார்.

 

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வீட்டின் சுவரில் இருந்து குதித்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற விதம் அங்கிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வஜிர நிஷாந்த என்ற 55 வயதுடைய வர்த்தகர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவரின் வீட்டிற்க்கு 2021 இல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதுடன், அவரது வியாபார இடத்திற்கும் தீ வைக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட வர்த்தகர் லலித் கன்னங்கரவிடம் பல சந்தர்ப்பங்களில் கப்பம் கோரப்பட்டிருந்ததுடன் பணத்தை செலுத்தாத காரணத்தினால் அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் லலித் கன்னங்கர பேரூந்து நடத்துனராகப் பணிபுரிய கொழும்புக்கு வந்தபோது, ​​கொலையுண்ட வர்த்தகர் தனது வீட்டில் தங்க வைத்து உதவி செய்துள்ளதாகவும், அவருக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை உயிரிழந்த வர்த்தகர் பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.