அரிசியில் தவிட்டு சாயம்; யாழ். அரிசி ஆலை உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம்!

21 0

அரிசியில் செயற்கை தவிட்டு சாயத்தை கலந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

சுதுமலை பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் பரிசோதனையை மேற்கொண்டவேளை, செயற்கை தவிட்டு சாயங்கள் கலந்த ஒரு தொகை அரிசியினை கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டுபிடித்துள்ளார்.

அந்த அரிசி மாதிரிகளை மேலதிக பரிசோதனை நடவடிக்கைக்காக அநுராதபுரத்தில் உள்ள அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பரிசோதனை முடிவில், அரிசியில் சாயம் கலக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து, அரிசி ஆலை உரிமையாளருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை (4) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணையில் உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.