எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி வடகிழக்கில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயற்குழு கூட்டம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று (5) நடைபெற்றது.
அதன் பின்னர், ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே கட்சியின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
தென்பகுதி மக்கள் தமக்குரிய தலைமையினை தெரிவுசெய்துள்ளனர். கடந்த காலங்களில் தமிழ் தேசியம் என்ற நிலைமையினை தக்கவைத்து தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டியிருந்தமையால் நாம் அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை. இன்று தமிழ் தேசியம் சீரழிந்து சிதறடிக்கப்பட்டு மக்கள் கலங்கிய குளத்தில் நீந்துகின்ற மீன்களாக உள்ளனர்.
பல்வேறு சக்திகளாலும் எமது மக்களின் வாக்குகள் கவரப்படுகின்ற பரிதாப நிலை இன்று ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் அனைவரும் ஒரே அணியாக திரண்டு ஈரோஸ் அமைப்பினூடாக போட்டியிடும் பிரதிநிதிகளை தெரிவுசெய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
இந்த ஊடக சந்திப்பில் கட்சியின் செயலாளர் எ.இ.ராசநாயகம் மற்றும் தலைவர் துஸ்யந்தன், கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.