இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம்

12 0

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக  படகுடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ராமேஸ்வரம் – தங்கச்சிமடத்தில் மீனவர்கள் மற்றும் சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் இன்று வியாழக்கிழமை (3) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்டுத் தருமாறு கோரி மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (28) ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 17 இந்திய மீனவர்கள்  எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்த 17 மீனவர்கள் உட்பட முன்னதாக சிறைபிடிக்கப்பட்ட சுமார் 150க்கும் மேற்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இலங்கை கடற்படை வசமுள்ள நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி முதலான மாவட்டங்களைச் சேர்ந்த 175க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இன்று காலை முதல் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் விசைப்படகு மீனவர்கள் மற்றும்  சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளமை மிகுந்த வேதனை அளிக்கிறது.  எனவே, இலங்கை சிறையில் உள்ள தங்கள் உறவினர்களை விரைந்து மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க மீனவர்களின் உறவினர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று மூன்றாவது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.