இந்த ஆண்டுக்கான காற்றாலை சீசன் நிறைவடைந்தது: அனல் மின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு

8 0

இந்த ஆண்டுக்கான காற்றாலை சீசன் நேற்றுடன் முடிந்ததால், அனல்மின் உற்பத்தியை அதிகரிக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 9,150 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்கள் உள்ளன. இவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள் சொந்த மின் பயன்பாட்டுக்கும், எஞ்சியதை மின்வாரியத்துக்கும் விற்பனை செய்கின்றன.

ஆண்டுதோறும் மே முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றாலை சீசன் ஆகும். நடப்பு சீசனில் காற்றாலை மின்நிலையங்களில் இருந்து தினமும் சராசரியாக 3 ஆயிரம் முதல் 4,500 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கிறது. எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் செப்டம்பர் மாதத்திலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், மின்தேவை அதிகரித்தபடி இருந்தது.

மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்: இந்நிலையில், காற்றாலை சீசன் நேற்றுடன் முடிந்தது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த ஆண்டுக்கான காற்றாலை சீசன் இன்றுடன் (நேற்றுடன்)முடிவடைந்தது.எனினும், அடுத்த ஒரு சிலநாட்களுக்கு காற்றின் வேகம்இருக்கும் என்பதால் காற்றாலை மின் உற்பத்தி நடைபெறும். பின்னர் காற்றாலை மின் உற்பத்தி படிப்படியாக குறையும். இந்தஆண்டு செப்.10-ம் தேதி காற்றாலை மூலம் மிக அதிகபட்சமாக5,838 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது.

காற்றாலை மின்சாரம் அதிகம் கிடைத்ததால் அனல் மின் உற்பத்தி குறைக்கப்பட்டது. வரும் நாட்களில் அனல் மின் உற்பத்தி மீண்டும் அதிகரிக்கப்படும். அத்துடன், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தினசரி மின்தேவை குறையும். எனவே, தினசரி மின்தேவை எளிதாக பூர்த்தி செய்யப்படும்’’ என்றனர்.