கொட்டித்தீர்க்கும் மழை ; முற்றாக புதையுண்டுபோயுள்ள வீடுகள் ; பயணிகளுடன் மண்சரிவில் சிக்குண்ட பஸ்கள் – நேபாளத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் பலி

10 0

நேபாளத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் தலைநகர் காத்மண்டுவில் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

மழைவெள்ளம் தலைநகரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ச்சியான மழை காரணமாக ஆறுகள பெருக்கெடுத்துள்ளதால் தலைநகரின் பல நகரங்கள் நீரின் கீழ் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளம் மண்சரிவு காரணமாக 100க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளன,நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன,மி;ன்கோபுரங்கள் வீழ்ந்துள்ளன என நேபாள தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலநிலை நெருக்கடி காரணமாகவே நேபாளம் மிக அதிகளவான ஆபத்தான மழையையும் வெள்ளத்தையும் எதிர்கொண்டுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளம் காரணமாக தங்களின் வீடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்களையும்,தொலைதூர பகுதியில் வெள்ளத்தினால் சிக்குண்டுள்ளவர்களையும் தேடிகண்டுபிடித்து மீட்பதி;ல் மீட்பு பணியாளர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

காத்மண்டுவின் தென்பகுதியில் உள்ள லலித்பூரே மிக மோசமான பாதிப்புகளை  எதிர்கொண்டுள்ளது.பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் ஊடாக இராணுவத்தினரும் மீட்பு பணியாளர்களும் ஆபத்தான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நகரில் சேற்றில் அல்லது வெள்ளத்தில் சிக்குண்டிருக்கலாம் என கருதப்படுபவர்களை மீட்பதற்காக மீட்பு பணியாளர்கள் தங்கள் கரங்களால் அந்த பகுதிகளை தோண்டிவருகின்றனர்.

கூரைகளின் மேல் தஞ்சமடைந்துள்ள மக்களை மீட்பதற்கு ஹெலிக்கொப்டர்களையும் படகுகளையும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பயன்படுத்துகின்றனர்.

வெள்ளிக்கிழமை முதல் 192 பேர் உயிரிழந்துள்ளனர் 92 பேர் காயமடைந்துள்ளனர் பெருமளவானவர்கள் காணாமல்போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3700 பேரை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொலைதூரத்தில் உள்ள துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளை மீட்பு பணியாளர்கள் சென்றடைந்ததும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பொலிஸார் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளும் வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன.

காத்மண்டுவின் முக்கிய வீதியொன்றால் சென்றுகொண்டிருந்த இரண்டு பேருந்துகள் மண்சரிவில் சிக்குண்டன  எனதெரிவித்துள்ள அதிகாரிகள் குறிப்பிட்ட பேருந்திலிருந்த 16 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாப்பயணிகளின் பேருந்து மண்ணிற்குள் புதையுண்ட நிலையில் காணாப்படுவதை  காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

டொலாக்கா மாவட்டத்தின் பிமேஸ்வரில் இடிந்து விழுந்த வீட்டிலிருந்து இரண்டு வயது பையன் உயிருடன் மீட்கப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.