வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவர் கைது

9 0

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பெண் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றை நடத்தி வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான பெண் தென் கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மூன்று நபர்களிடமிருந்து 15 இலட்சம் ரூபா பணமும் இத்தாலியில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக நபரொருவரிடமிருந்து 7 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பணமும் பெற்று மோசடி செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 10  இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.