சங்கு சின்னம் தேவை – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம்

7 0

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சங்கு சின்னத்தை கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக கட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தமிழ் பொது கட்டமைப்பாக சிவில் அமைப்புகளுடன் இணைந்து அரியநேத்திரனை தமிழ் பொது வேட்பாளராக களம் இறக்கியிருந்தது.

குறித்த சுயேச்சை குழுவுக்கு சங்கு சின்னமாக வழங்கப்பட்ட நிலையில் தேர்தலில் போட்டியிட்டு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தது.

இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் சட்டங்களின் பிரகாரம் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏழு நாட்களுக்குள் தமக்கான சின்னத்தை கோரி விண்ணப்பிக்க முடியும் என்ற ஒரு விதிமுறையின் கீழ் இந்த கோரிக்கையை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அந்த முக்கியஸ்தர் தெரிவித்தார்.

இதன் பிரகாரம், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஏற்கனவே குத்துவிளக்கு சின்னம் பயன்படுத்தியிருந்த போதிலும் அதனை விடுத்து சங்கு சின்னம் தற்போது மக்கள் மத்தியில் அறியப்பட்டுள்ளமையினால் அந்த சின்னத்திலேயே போட்டியிடுவதற்கு கூட்டணியில் பலர் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.