மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறேன், பொதுத் தேர்தலிலும் போட்டியிடுவேன் – அப்துல்லா மஹ்ரூப்

15 0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்தும் கட்சியின் சகல உறுப்புரிமையில் இருந்தும் தான் விலகிக்கொள்வதாகவும் இம்முறை பொதுத் தேர்தலிலும் தான் போட்டியிடவுள்ளதாகவும் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்,

மக்கள் காங்கிரஸில் கடந்த பத்து வருடங்களாக பயணித்துள்ளேன். ஒன்பது வருட காலமாக தேசிய அமைப்பாளராக இருந்து 2015இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 34 ஆயிரம் வாக்குகளை பெற்று முதலிடத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியதுடன் முன்னால் அமைச்சர் ரிசாத் பிரதி அமைச்சரை பெற்றுத் தந்தார். மக்கள் பணிக்காக இதனை அர்ப்பணம் செய்து பணியாற்றினேன்.

இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் மூதூரில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஒருவரை நிறுத்தி திட்டமிட்டு தோற்கடிப்பதற்காக சஜீத்தும் ஹக்கீமும் எனக்கு எதிராக செயற்பட்டார்கள். இதனை ரிசாட்டுக்கு எடுத்துக் கூறியிருந்தேன். இருந்தபோதிலும் இரு வருடங்களாக திட்டமிட்டு என்னை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக வைத்தியர் ஹில்மிக்கு வேட்பாளரை தருவதாக கூறி சதி நடத்திவிட்டு சென்றுள்ளார்.

இவ்வளவு காலமாக இப்படியொரு பிரதான சூத்திரதாரி இருப்பார் என்று நினைக்கவில்லை. தற்போது அறிந்துகொண்டேன், இவர்களது சயரூபத்தை. இருந்த போதிலும் எதிர்வரும் 11ஆம் திகதி வேட்புமனு தாக்கலின்போது பொதுத் தேர்தலில் களமிறங்குவேன் என்பதை தெரிவிக்கிறேன் என்றார்.