பொதுத்தேர்தலில் பொதுச் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளோம் – எஸ்.பி.திசாநாயக்க

15 0

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களை ஒன்றிணைத்து பொதுத்தேர்தலில் பொதுச் சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களை ஒன்றிணைத்து பொதுத்தேர்தலில் போட்டியிட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

போட்டியிடும் அரசியல் கட்சி அல்லது கூட்டணி, சின்னம் குறித்து விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். பேச்சுவார்த்தையின்போது கிண்ணம், வெற்றிலை, நாற்காலி மற்றும் எரிவாயு சிலிண்டர் ஆகிய சின்னங்களில் போட்டியிட வேண்டும் என்று மாறுபட்ட  யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

இறுதியில் பொதுச்சின்னத்தில் போட்டியிட  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவியை வழங்க தயாராகவுள்ளோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதில்லை. பொதுஜன பெரமுன இம்முறையும் படுதோல்வியடையும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என்றார்.