பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சை: தலைமை ஆசிரியர்கள் மீண்டும் சென்னைக்கு பணியிட மாற்றம்

28 0

அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சையான விவகாரத்தில் நடவடிக்கைக்கு உள்ளான தலைமையாசிரியர்கள் இருவரும் மீண்டும் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தன்னம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு சொற்பொழிவு வழங்கிய விவகாரம் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தமிழரசி, சண்முகசுந்தரம் ஆகியோர் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சங்கங்கள் கண்டனம்: இந்த நடவடிக்கைக்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன. மேலும், 2 தலைமையாசிரியர்களும் தங்களின் குடும்பச்சூழலை கருத்தில்கொண்டு சென்னை மாவட்டத்திலேயே பணிமாறுதல் வழங்குமாறு பள்ளிக்கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

விருகம்பாக்கம், அடையாறு: இந்நிலையில் தலைமை ஆசிரியர்கள் இருவரும் மீண்டும் சென்னை மாவட்டத்துக்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த தமிழரசி, விருகம்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கும், சைதாப்பேட்டை தலைமை ஆசிரியராக இருந்த சண்முகசுந்தரம், அடையாறு அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.