மாகாண சபைத் தேர்தலை நடத்தி மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே முக்கியத்துவமானது

31 0

பாராளுமன்றத் தேர்தலை விட மாகாண சபைத் தேர்தலை நடத்தி மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே முக்கியத்துவமானது. எனவே, 13 அல்லது 13 பிளஸ் என்பதற்கு அப்பால் முதலில் இந்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் ஸ்திரமாகவுள்ளதாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இராஜகிரியவில் திங்கட்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதியின் உரைக்கமைய பாராளுமன்றம் ஓரிரு தினங்களுக்குள் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒக்டோபர் 26ஆம் திகதி எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்ததன் பின்னர் 52 – 66 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும்.

பாராளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவிக்கும் வர்த்தமானியில் வேட்புமனு தாக்கலுக்கான தினத்தையும் தேர்தலுக்கான தினத்தையும் குறிப்பிட வேண்டியதில்லை. அதாவது இவ்வாரம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் டிசம்பர் முதல் வாரத்துக்குள் நிச்சயம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தற்போதுள்ள பாராளுமன்றத்துக்கும் மக்கள் ஆணை கிடையாது. எனவே இந்த பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும். அதேவேளை உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும் நடத்தி மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.

தற்போது மாகாண சபைகளும் காணாமலாக்கப்பட்டிருக்கின்றன. அவை தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்காக நாம் முன்னிற்போம். 13ஆவது திருத்தமா அல்லது 13 பிளஸா என்பது இரண்டாம் பட்சமாகும். ஆனால் மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் ஸ்திரமாகவுள்ளோம் என்றார்.