இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகை போராட்ட அறிவிப்பு எதிரொலி – பேச்சுவார்த்தைக்கு பள்ளிக்கல்வித் துறை அழைப்பு

14 0

டிட்டோஜேக் கூட்டமைப்பு முற்றுகை போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதன் மாநில நிர்வாகிகளை பள்ளிக்கல்வித் துறை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உட்பட 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டிட்டோஜேக் கூட்டமைப்பினர் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து இந்த அமைப்பின் ஆசிரியர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1-ம் தேதிகளில் மேற்கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் டிட்டோஜேக் மாநில நிர்வாகிகளை பள்ளிக்கல்வித் துறை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இதுகுறித்து தொடக்கக்கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1-ம் தேதிகளில் நடைபெறும் என்று டிட்டோஜேக் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையடுத்து டிட்டோஜேக் மாநில நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் நாளை (செப்டம்பர் 23) காலை 9.15 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். எனவே, டிட்டோஜேக் அமைப்பில் இடம் பெற்றுள்ள சங்கங்களில் இருந்து தலா ஒரு பிரதிநிதி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.