நாட்டை சுபீட்சத்தை நோக்கி வழிநடத்துவதற்கான ஆற்றல் அனுரகுமார தரப்புக்கு கிடைக்க வேண்டும்!

24 0

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள அநுரகுமார திசாநாயக்க தரப்புக்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த ஜனாபதிபதித் தேர்தலின் பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனுரகுமார தரப்புக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இலங்கையின் மிகவும் நெருக்கடியான காலகட்டமொன்றில் இந்த நாட்டை சுபீட்சத்தை நோக்கி வழிநடத்துவதற்கான ஆற்றல் அனுரகுமார தரப்புக்கு கிடைக்க வேண்டும்.

அதே நேரம் வெற்றி பெற்றுள்ளவர்கள் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதோ அதற்கான பொறுப்பு மற்றவர்களுக்கு இல்லை என்பதோ இல்லை.

அந்த வகையில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான விடயங்களில் பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் எமது கட்சியும் புதிய ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பினை வழங்கும்” என்றும் அறிவித்துள்ளார்.