கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவம்

11 0

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது.

இலங்கையில் உள்ள ஈச்சரங்களில் ஒன்றாகவும் தானாக தோன்றிய ஆலயங்களில் ஒன்றாகவும் கருதப்படும் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 04ஆம் திகதி அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் இந்த உற்சவம் நடைபெற்றுள்ளது.

கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாகிய அற்புத திருத்தலமாக திகழ்ந்துகொண்டிருக்கும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயமானது கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்டதாக விளங்கி வருகின்றது.

கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய வருடாந்த உற்சவத்தில் திருவிழாக்கள் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று(22) மாலை 04 மணிக்கு தேரோட்டப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல நூற்றாண்டு பழைமைவாய்ந்த மரச்சில்லுகளால் உருவாக்கப்பட்ட இரண்டு தேர்கள் முறையே விநாயகர் தேர் , சித்திரத்தேர் வடம் பூட்டி ஆண் அடியார்களால் மட்டும் ஆலயவெளிவீதியில் முற்றும் மணல் தரையில் மிகவும் பக்திபூர்வமாக இழுக்கப்படுவது இது எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோயில் தேரோட்ட விழா பழமையான தமிழர் பாரம்பரிய பண்பாடுகளை பிரதிபலிக்கும் மஹோற்சவப் பெருவிழா என்பதுடன் நேற்றைய தினம்(22) ஊரடங்கு சட்டம் மற்றும் தேர்தல் நிலைமைகளுக்கு பத்தியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.