அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி நாட்டுமக்களின் அபிலாஷைகளின் பிரதிபலிப்பு

12 0

அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி நாட்டு மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், ஒருமைப்பாட்டையும், அபிவிருத்தியையும் ஊக்குவிப்பதன் ஊடாக மக்கள் வழங்கிய ஆணையை அவர் ஈடேற்றுவார் எனத் தாம் நம்புவதாகத் தெரிவித்திருக்கிறார்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலின் முதலாவது வாக்குகள் எண்ணப்பட்டு வெளியான முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையிலிருந்த வேளையில், அவரது வெற்றிக்கு வாழ்த்துக்கூறி தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றைச் செய்த ரிஷாட் பதியுதீன், அப்பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

‘இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி நாட்டு மக்களின் அபிலாஷைகளின் வெளிப்பாடாகும். நாட்டு மக்களுக்கு இடையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதுடன், அபிவிருத்தியை ஊக்குவிப்பதன் ஊடாக மக்கள் உங்களுக்கு வழங்கிய ஆணையை உரியவாறு ஈடேற்றுவீர்கள் என நாம் நம்புகின்றோம். உங்களது வெற்றிக்கும், நீங்கள் அளிக்கவிருக்கும் தலைமைத்துவத்துக்கும் வாழ்த்துக்கள்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.