சஜித், அரியநேத்திரன், ரணில் ஆகியோருக்கு வாக்களித்தேன் – மாவை.சேனாதிராஜா பகிரங்கம்

12 0

கட்சியின் தீர்மானத்துக்காக சஜித்துக்கும் இன விடுதலைக்காக அரியநேத்திரனுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வாக்களித்தேன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனதிராஜா தெரிவித்தார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (21) நடைபெற்ற நிலையில் மாவிட்டபுரத்தில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தீர்மானத்துக்கு அமைவாக நான் எனது முதல் வாக்கினை அளித்துள்ளேன். இரண்டாவது வாக்கினை தமிழ் பொது வேட்பாளருக்கும் மூன்றாவது வாக்கினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அளித்துள்ளேன்.

தமிழ் மக்கள் தங்களுடைய விடுதலையைப் பெறுவதை இலக்காகக் கொண்டு தமது வாக்குகளை அளிக்க வேண்டும். நான் மூவருக்கு வாக்களித்திருந்தாலும் அந்த வாக்குகள் எமது இனத்தின் விடுதலையை மையமாகக் கொண்டு அளிக்கப்பட்டவையாகத் தான் உள்ளன.

தற்போது தமிழ் இன விடுதலையை முன்வைத்து வெவ்வேறு விதமான முடிவுகளை எடுத்தவர்கள் இந்த தேர்தலின் பின்னர் தமிழின விடுதலைக்காகவும் இலட்சியத்தை அடைவதற்காகவும் ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும். அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது என்றார்.