
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் ஜனநாயக நாட்டில் மக்களுக்கான வாக்குரிமை என்பது அவசியமானதாகும். நடைபெறவுள்ள தேர்தலை எவ்வித வன்முறைகளுமின்றி சந்தர்ப்பத்தினை தவறவிடாமல் அமைதியான முறையில் முன்னெடுக்க சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ ரிவி சாந்த கணேச குருக்கள் தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் இத்தேர்தல் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தை கொண்டிருக்க வேண்டியது மிக அவசியமானதாகும்.
ஜனநாயக நாட்டில் மக்களுக்கான வாக்குரிமை என்பது அவசியமானதாகும். தமது பொன்னான வாக்குகளை செலுத்துவது கட்டாயமானதாகும். இந்த சந்தர்ப்பத்தினை தவறவிடாமல் கலவரங்களின்றி அமைதியான முறையில் இதனை நிறைவேற்ற சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியுள்ளது.
இலங்கை என்கிற ஜனநாயக நாட்டில் எமது வாக்குரிமை, எவ்வாறான வேலைப்பளுக்கல் இருந்தாலும் இத்தருணத்தை நன்கு பயன்படுத்தி நாட்டுக்குத் தேவையான, கடந்த கால பொருளாதார நெருக்கடியில் இருந்து துன்பங்களை மீண்டு வரவேண்டி ஒரு சரியான தலைவரை தெரிவு செய்வது எமது கடமையாகும். அது விருப்பத்துக்கு ஏற்றவாறு இந்த தேர்தல் காலத்தை சந்திப்பது அவசியமாகியுள்ளது.
இந்த தேர்தலை நெருக்கடிகள் இல்லாமல் அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கு நாட்டின் சகல மக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டியது மிக முக்கியமாகும்.
ஜனாதிபதி தேர்தலில் சகல மக்களும் தங்களது வாக்குரிமையை நிலைநாட்டும் வகையில் உரிய காலத்தில், அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் சென்று வாக்களிக்க வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இடம்பெறவுள்ள இந்த தேர்தலில், நாட்டை வழிநடத்தக்கூடிய நல்ல தலைவனை தெரிவு செய்ய சகலரும் வாக்களிக்க வேண்டும்.
இந்தத் தேர்தலை எவ்வித வன்முறைகளுமின்றி அமைதியான முறையில் முன்னெடுக்க சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.