அரசியல் தலைமைத்துவம் மக்களின் முடிவுகளை மதிக்கவேண்டும்

15 0

மக்களின் முடிவுகளை மதிக்கும் பொறுப்புணர்வுள்ள அரசியல் தலைமைத்துவத்தை ஜனாதிபதி வேட்பாளர்களும் அரசியல் கட்சியின் தலைவர்களும் வெளிப்படுத்தவேண்டும் என  முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கருஜெயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிக்கையொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

நாங்கள் மிக முக்கியமான தேர்தலொன்றை நெருங்கிக்கொண்டிருக்கும் தருணத்தில் அடுத்த ஐந்து வருடத்திற்கு இலங்கை மக்களிற்கு தங்களின் ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாய்ப்பு இலங்கையின் அனைத்து மக்களிற்கும் கிடைத்துள்ளது.

இந்த உரிமையை எவ்வித தலையீடும் இன்றி அனைத்து மக்களும் பயன்படுத்த முடியும்.

இந்த சூழ்நிலையில் ,ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களை விட கட்சியின் தலைவர்களிற்கு மிகப்பெரும் பொறுப்புணர்வுள்ளது,மக்களின் முடிவுகளை மதிப்பதே அவர்களின் மிக முக்கிய கடமை.

மக்களின் முடிவுகளை மதிப்பது ,நாட்டின் சட்டங்களையும்,சமூக நீதியின் அடிப்படை கொள்கைகளையும் மதிப்பது மாத்திரமல்ல,அடிப்படை தார்மீக நாகரீக தராதரஙகளை கடைப்பிடிப்பதுமாகும்.

அமைதியான வன்முறைகள் அற்ற தேர்தல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு இலங்கையின் தேர்தல் சமூகம் சமீப காலங்களில் வெளிப்படுத்தியுள்ள அர்ப்பணிப்பை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இந்த முயற்சிகள் தொடரவேண்டும்,இதனை செய்ய தவறினால் இலங்கை பங்களாதேஸ் போன்ற நிலைக்கு தள்ளப்படும் ஆபத்து ஏற்படலாம்.

சில ஆபிரிக்க நாடுகளில் தேர்தலிற்கு பின்னரான வன்முறைகள் அந்த நாட்டிற்கு பெரும் பாதிப்பை  ஏற்படுத்தியுள்ளதை உணர்வதும் அவ்வாறான சூழ்நிலையை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதும் அவசியமாகும்.

மேலும் செப்டம்பர் 21ம் திகதி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர்,தேசத்திற்கான பெரும் பொறுப்புணர்வை ஏற்றுக்கொள்கின்றார்.

மாகாணசபை தேர்தல்கள் உள்ளுராட்சி தேர்தல்கள் உரிய முறையில் இடம்பெறுவதை உறுதி செய்வதும்,மக்கள் ஜனநாயக நடைமுறைகளில் முழுமையாக ஈடுபடுவதற்கு அனுமதிப்பதும் முக்கியமான விடயங்களில் ஒன்று.

மேலும் தனிநபர் ஒருவருக்கு அளவுக்கதிகமான அதிகாரங்களை வழங்கும் தற்போதைய நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதன் மூலம் தற்போதைய தேர்தல் முறையை சீர்திருத்துவதும் அவசியம்.