ஜாபர் சாதிக், அமீர் உள்பட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

17 0

சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத் துறை வழக்கில் இயக்குநர் அமீர் உள்பட 12 பேருக்கு எதிராக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கைதான திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் அமலாக்கத் துறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.

அதில், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம், திரைப்பட இயக்குனர் அமீர் மற்றும் ஜாபர் சாதிக்கின் படத்தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்கள் என மொத்தம் 12 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்து முடக்கவும் அனுமதி கோரப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் 12-வது நபராக சேர்க்கப்பட்டுள்ள திரைப்பட இயக்குநர் அமீர் மீதும் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.