5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை : பரீட்சை திணைக்களத்திற்கு முன் பெற்றோர் ஆர்ப்பாட்டம்

13 0

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் 3 வினாக்களை நீக்கி பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுமாறு பரீட்சை திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் சிலர் பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக இன்று (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் போது வினாத்தாளின் முதல் மூன்று வினாக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

இதனையடுத்து, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் 3 வினாக்களை நீக்கி பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுமாறு பரீட்சை திணைக்களத்தினால் நேற்று (17) அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் சிலர் பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக இன்று (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் பரீட்சையை இரத்துச் செய்யுமாறும் கூறியுள்ளனர்.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் சிலருக்குப் பரீட்சை திணைக்களத்திற்குள் சென்று கடிதங்களைச் சமர்ப்பிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெற்றோர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சம்பவ இடத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் குழு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் மிகவும் கவனக்குறைவாக இருப்பதாகவும் இதனால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.