பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சகோதரர்கள் உட்பட நால்வர் கைது

13 0

மது போதையில் பெண் ஒருவரைத் தாக்கி காயப்படுத்திய கும்பலைக் கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சகோதரர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

கும்புகொட மற்றும் எம்பிலிப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 19, 23 மற்றும் 30 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் உட்பட நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்திற்கு மது போதையில் சென்ற கும்பல் ஒன்று பெண் ஒருவரைத் தாக்கி காயப்படுத்துவதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் சிலர் சந்தேக நபர்களைக் கைது செய்து பொலிஸ் முச்சக்கரவண்டியில் ஏற்ற முயன்றுள்ளனர்.

இதன்போது, சந்தேக நபர்கள் நால்வரும் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.