மின்சாரம் தாக்கி இளைஞன் பலி ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

14 0

கேகாலை, பின்தெனிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் நேற்று (17) உத்தரவிட்டுள்ளது.

கேகாலை, கிரிதன பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

உயிரிழந்த இளைஞன் கடந்த 16 ஆம் திகதி அன்று தனது உறவினருடன் இணைந்து குருகொட ஓயாவிற்கு சென்று கொண்டிருந்த போது, வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக மரவள்ளிக்கிழங்கு தோட்டம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பிகளில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் மின்சாரக் கம்பிகளைப் பொருத்திய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கேகாலை நீதவான் நீதிமன்றில் நேற்று (17) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.